சாலை விரிவாக்கம் பணி நடந்து வருவதால் பழமைவாய்ந்த ஆலமரத்தை வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நட்ட மக்கள்

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு- ஈரோடு பிரதான சாலையில் உள்ள ராஜா கவுண்டம்பாளையம் கிராமம் அருகேயுள்ள சாலையோரத்தில் முனியப்பன் கோயில் உள்ளது. இந்த கோயில் அருகே 200ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரம் இருந்தது. இந்த ஆலமரத்தை சுற்றி கல்திட்டுகள் கட்டப்பட்டு இருந்தது. இதனால் கோயிலுக்கு வருபவர்கள் மற்றும் பேருந்துக்காக காத்திருப்பவர்களும் இந்த திட்டில் அமர்ந்து இருப்பது வழக்கம்.   

இந்தநிலையில் பள்ளிபாளையம்- திருச்செங்கோடு சாலை விரிவாக்கம் தற்போது நடந்து வருகிறது. இதனால் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள கட்டிடங்கள் அகற்றப்பட்டு வருகிறது. இந்த விரிவாக்க பணியில் முனியப்பன் கோயில் அருகேயுள்ள ஆலமரத்தையும் அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால் ஊர் மக்கள் ராஜாகவுண்டம்பாளையத்தின் அடையாளமாக விளங்கும் இந்த ஆலமரத்தை தாங்களே பிடுங்கி வேறு இடத்தில் நட்டுகொள்வதாக தெரிவித்தனர். அதன்படி இன்று காலை ஆலமரத்தை சுற்றி ஜேசிபி இயந்திரம் மூலம் குழி வெட்டி அதனை வேரோடு பெயர்த்தெடுத்து சென்று சுமார் 200அடி தூரத்தில் உள்ள காலி இடத்தில் ஆலமரம் மரம் நடப்பட்டது. இதனால் ராஜா கவுண்டம்பாளையம் மக்கள், முனியப்பன் கோயிலுக்கு வரும் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.