விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் பல இல்லத்தரசிகளின் ஃபேவரைட்டான தொடர், இந்த தொடரில் கணவனை இழந்து கைக்குழந்தையுடன் அப்பாவி பெண்ணாக வலம் வரும் ரித்திகா பலருக்கும் பிடித்த நடிகையாவார். இவர் ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக இருந்து வந்தாலும் இவரை மக்களிடத்தில் பிரபலப்படுத்தியது என்னவோ ‘குக் வித் கோமாளி-2‘ நிகழ்ச்சி தான், அதில் கோமாளியான பாலாவுக்கும், இவருக்கும் இடையே நடக்கும் காட்சிகள் பார்ப்பதற்கே நன்றாக இருக்கும். இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் வெளியுலகிற்கு நன்கு அறிமுகமானார், அதிலும் இவர் எளிமையான தோற்றத்தில் பார்ப்பதற்கு நமது பக்கத்துக்கு வீட்டு பெண் போலவே இருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி சூப்பர் சிங்கர்களை மிஞ்சும் அளவிற்கு இவர் இனிமையாக பாடியும் பலரது இதயங்களை கொள்ளைக்கொண்டுள்ளார்.
ரித்திகா ‘ராஜா ராணி’ சீரியலிலும் நடித்திருக்கிறார் மற்றும் ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியிலும் இரண்டாவது பரிசை வென்றிருக்கிறார். இன்றைய இளைஞர்கள் பலருக்கும் பேவரைட்டான பெண்ணாக இருக்கும் ரித்திகாவிற்கு திருமணம் ஆகப்போவதாக சமூக வலைத்தளங்களில் சமீப காலமாக பல செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தது. தற்போது இந்த செய்தியை உண்மையென விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினி திவ்யதர்ஷினி உறுதிப்படுத்தியுள்ளார். நடிகை ரித்திகா அவரது திருமண அழைப்பிதழை திவ்யதர்ஷினிக்கு கொடுத்திருக்கிறார், அதனை டிடி குறிப்பிட்டு தனது இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.
26 வயதாகும் ரித்திகா அவர் பணிபுரியும் அதே விஜய் டிவியில் கிரியேட்டிவ் ப்ரொடியூஸராக இருக்கும் வினு என்பவரை காதலித்து வந்த நிலையில், தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. வினு மற்றும் ரித்திகா இருவரும் இணைந்து பல நிகழ்ச்சிகளில் இணைந்து பணியாற்றியுள்ளனர். பாக்கியலட்சுமி சீரியலில் தான் இவருக்கு திருமண பேச்சு எழுந்து வருகிறது என்று பார்த்தால் நிஜ வாழ்க்கையிலேயே இவருக்கு தற்போது திருமணம் நடைபெற இருக்கிறது.