48 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்த உலக மக்கள் தொகை!| Dinamalar

நியூயார்க்: உலக மக்கள் தொகை 800 கோடியை தாண்டியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் மக்கள் தொகையில் 100 கோடி பேர் இணைந்துள்ளனர்.

கடந்த 1800களில் உலக மக்கள் தொகை ௧௦௦ கோடியை எட்டியது. இதைத்தொடர்ந்து 200 கோடியை எட்ட 100 ஆண்டுகளாகின.1974ல் 400 கோடியை எட்டிய மக்கள் தொகை, ௪௮ ஆண்டுகளில் இரண்டு மடங்குகளாக அதிகரித்துள்ளது. இதன்பின், மக்கள் தொகை இரட்டிப்பாகும் வாய்ப்பு இல்லை என்றே ஐ.நா., மக்கள் தொகை நிதி அமைப்பு தெரிவித்துள்ளது; அடுத்த சில ஆண்டுகளில் குழந்தை பிறப்பு குறையும்.

இதுகுறித்து ஐ,நா., மக்கள் தொகை நிதி அமைப்பு கூறியுள்ளதாவது:800 கோடி பேரின் நம்பிக்கை, கனவு, எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும். அனைவரும் இணைந்து, 800 கோடி பேரின் வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும்.மக்கள் தொகை அதிகரிப்பு என்பது நம் சமூகத்தின் பெரிய சாதனையாகும்.

வறுமை, பாலின பாகுபாடு குறைந்துள்ளது; மருத்துவ வசதிகள் அதிகரித்துள்ளது; கல்வி கிடைக்கிறது; பிரசவத்தின்போது பெண்கள் இறப்பது குறைந்துள்ளது; பிறக்கும்போதே குழந்தை இறப்பது குறைந்துள்ளது.அதே நேரத்தில் மக்கள் தொகை, கடந்த ௧௦௦ ஆண்டுகளில் அசுரத்தனமாக அதிகரித்துள்ளது என கூறியுள்ளது.

சிந்திக்க வேண்டும்

மக்கள் பல்வேறு வகையான தாக்குதலுக்கு ஆளாகின்றனர். ஒரு பக்கம் பருவநிலை மாறுபாடு பிரச்னை என்றால், மறுபக்கம் விலைவாசி உயர்வு. மனித குடும்பத்தின், 800 கோடியாவது உறுப்பினரை வரவேற்கும் நேரத்தில், எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும். மனித குலம் அமைதியாக, சுகாதாரமாக, மகிழ்ச்சியாக வாழ்வதற்கான வழிமுறைகளை, ‘ஜி – 20’ நாடுகள் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.

– அன்டோனியோ குட்டரஸ்,

பொதுச் செயலர், ஐ.நா.,


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.