ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி.!

தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெ. ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் மரணமடைந்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு 75 நாட்களாக அளிக்கப்பட்ட நீண்ட சிகிச்சைக்கு சந்தேகத்தை கிளப்புவதாகவும், மேலும் இந்த மரணத்தில் மர்மம் இருந்ததாக அப்போதைய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டிய நிலையில், இது தொடர்பாக விசாரிப்பதற்காக 2017ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு அறிவித்தது.

இந்த ஆணையம் சுமார் நான்கரை ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு தனது அறிக்கையை இந்த ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் அக்டோபர் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ அல்லது இதய அறுவை சிகிச்சை செய்ய அமெரிக்க மருத்துவர் உள்பட பல மருத்துவர்கள் பரிந்துரைத்தும் அது வழங்கப்படாதது ஏன் என ஆணையம் கேள்வி எழுப்பியிருந்தது. மேலும்

, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரைத்தது.

இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் ரகசியம் இருப்பதாகவும், வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை எனவும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டி, ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையின் அடிப்படையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஆர்.ஆர்.கோபால்ஜி என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

தமிழக அரசின் உயரதிகாரிகள், அமைச்சர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், மாநில காவல்துறையை விசாரிக்க நியமிப்பது நியாயமான விசாரணைக்கு வழிவகுக்காமல், உண்மை நீர்த்துப்போகும் என்பதால், சிபிஐ விசாரிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு, இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் சிபிஐ-க்கு மனு அளிக்க வேண்டும் என்றும், மனு அளிக்காமல் தாக்கல் செய்யபட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.