பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல்..!

சண்டிகார்,

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

முன்னதாக ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தின. இந்த நிலையில் தற்போது அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை எதிர்கொண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், அரசு ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெறுவார். இந்த மாதாந்திர ஓய்வூதியமானது பொதுவாக அவர் கடைசியாக வாங்கிய சம்பளத்தில் பாதியாகும். புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை ஓய்வூதிய நிதிக்கு செலுத்துவர். அவர்கள் ஓய்வு பெறும்போது, ஒருமுறை மொத்தமாக குறிப்பிட்ட தொகையை பெறுவர்.

பழைய ஓய்வூதிய திட்டம் கடந்த 2003-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கைவிடப்பட்டது. மேலும் புதிய ஓய்வூதிய திட்டம் 2004-ம் ஆண்டு ஏப்ரலில் அமலுக்கு வந்தது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.