மத்திய அமைச்சர் நாராயண் ரானேவின் பங்களாவை இடிக்கும் பணி தொடக்கம்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், சட்ட விரோதமாக கட்டப்பட்ட மத்திய அமைச்சர் நாராயண் ரானே பங்களாவை இடிக்கும் பணி தொடங்கியது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சராக இருப்பவர் நாராயண் ரானே. இவருக்கு மகாராஷ்டிர மாநிலம் மும்பை ஜூகு கடற்கரை பகுதியில், 8 அடுக்குமாடிகள் கொண்ட ‘ஆதிஷ்’ பங்களா உள்ளது.

இந்த வீடு கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் விதியை மீறியும், அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டுமான பரப்பளவில் கட்டப்பட்டு உள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த புகார் தொடர்பாக உத்தவ் தாக்கரே ஆட்சியில் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் மத்திய அமைச்சர் நாராயண் ரானே வீட்டில் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பிறகு வீட்டில் சட்ட விரோதமாக கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து மாநகராட்சி நாராயண் ரானே வீட்டை இடிக்க நோட்டீஸ் அனுப்பியது. அவர் மாநகராட்சியின் நோட்டீசை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அமைச்சர் நாராயண் ரானே தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ததோடு, மத்திய அமைச்சர் நாராயண் ரானேவின் வீட்டை இடிக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் நாராயண் ரானே நேற்று அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட விரோத கட்டுமான பணிகளை இடிக்கும் பணிகளை தொடங்கி உள்ளார். அமைச்சர் நாராயண் ரானே பங்களாவில் சட்ட விரோத கட்டுமான பணிகள் இடிக்கும் பணி தொடங்கி இருப்பதை சமூக ஆர்வலர் சந்தோஷ் தாவுந்கர் வரவேற்று உள்ளார்.

அதே நேரத்தில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதியை மீறியதற்கு நடவடிக்கை எதுவும் எடுக்காதது குறித்தும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமீறலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அது இதைவிட மோசமாக இருக்கும் எனவும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.