ராஜீவ் கொலையாளிகளை போல் விடுதலை செய்ய கோரி நீதிமன்றத்தில் சாமியார் மனு

புதுடெல்லி: ராஜீவ் கொலையாளிகளை விடுவித்தது போல் தன்னையும் விடுதலை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சாமியார் ஷ்ரத்தானந்தா மனு தாக்கல் செய்துள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த சாமியார் ஷ்ரத்தானந்தா என்ற முரளி மனோகர் மிஸ்ரா. இவரது மனைவி ஷகீரா நமாசி. முன்னாள் மைசூர் திவானின் பேத்தியான ஷகீரா தனது கணவர் அக்பர் கலீலை விவகாரத்து செய்த பின் ஷ்ரத்தானந்தாவை கடந்த 1986-ல் திருமணம் செய்தார். கடந்த 1991-ம் ஆண்டு ஷகீராவின் சொத்துகளை அபகரிப்பதற்காக ஷகீராவுக்கு மயக்க மருந்து கொடுத்து, தனது மாளிகையில் உயிருடன் புதைத்தார் ஷ்ரத்தானந்தா. ஷகீராவின் மகள் கொடுத்த புகாரின் பேரில், அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
இந்த கொலை வழக்கில் ஷ்ரத்தானந்தாவுக்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக மாற்றியது. கடந்த 29 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள ஷ்ரத்தானந்தா, 80 வயதை கடந்து விட்டார்.

இந்நிலையில் அவர் தனது வழக்கறிஞர் மூலம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு எந்தவித தண்டனை குறைப்பும் இல்லாமல் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. எனக்கு ஒரு நாள்கூட இதுவரை பரோல் வழங்கப்படவில்லை. சமீபத்தில் ராஜீவ் காந்தி கொலையாளிகளை உச்ச நீதிமன்றம் விடுவித்தது. அவர்கள் எல்லாம் தங்கள் மேல் முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும்போதே பரோல் மற்றும் இதர சலுகைகளை அனுபவித்தனர். கொடிய குற்றங்களில் தொடர்புடையவர்கள் எல்லாம் விடுவிக்கப்பட்டுள்ளனர். என்னை மட்டும் விடுவிக்காதது சமத்துவ உரிமை மீறலாகும். எனது மனுவை விரைவில் விசாரித்து என்னை விடுவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.