ரூ.30 லட்சம் பறிக்க நாடகமாடிய மகன் கைது| Dinamalar

லக்னோ, உத்தர பிரதேசத்தில், தான் கடத்தப்பட்டதை போல் நாடகமாடி தந்தையிடம் 30 லட்சம் ரூபாய் பறிக்க முயன்ற நபரை, போலீசார் கைது செய்தனர்.

உத்தர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள தாமோதர் நகர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சந்திரகாந்த் திவாரி. இவர் போலீசிடம் சமீபத்தில் புகார் அளித்தார். அதன் விபரம்:

என் மகன் பெயர் சோம்நாத் திவாரி, மாநில அரசின் நீர்ப்பாசன துறையில் பணியாற்றுகிறார். இவர் கடந்த 13ம் தேதி காலை வேலைக்கு சென்றார். அதன் பின் வீடு திரும்பவில்லை. மறுநாள் எனக்கு, என் மனைவி மற்றும் மருமகள், ‘மொபைல் போன்’களுக்கு, ‘வாட்ஸ் ஆப்’ தகவல் வந்தது.

அதில், எங்கள் மகன் கடத்தப்பட்டுள்ளதாகவும், அவரை பத்திரமாக திருப்பி அனுப்ப, 30 லட்சம் ரூபாயை நாளை மாலை 4:00 மணிக்குள் தயார் செய்யுமாறும் குறிப்பிடப்பட்டு இருந்தது. போலீசிடம் சென்றால், என் மகனை 300 துண்டுகளாக வெட்டி வீசி விடுவோம் என மிரட்டுகின்றனர்.இவ்வாறு புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில், தந்தையிடமிருந்து பணம் பறிக்க, தன்னை யாரோ கடத்திவிட்டது போல் அவரது மகனே நாடகமாடியது தெரியவந்தது. கான்பூரில் கட்டாகார் என்ற இடத்தில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருந்த சோம்நாத் திவாரியை, போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.