புதுடெல்லி: விதிமுறைகளை மீறி பணியாளர்கள் இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து நாடு முழுவதும் நாளை ஒரு நாள் வங்கி பணியாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளனர். இதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இதனால் காசோலை பரிவர்த்தனை பாதிக்கும். அதே சமயம் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் தனியார் வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட சில வங்கிகளில் வெளி முகமை (அவுட்சோர்ஸிங்) மூலம் பணியாளர்களை அமர்த்துவதை கண்டித்து அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம், நவம்பர் 19ம் தேதி(நாளை) நாடு தழுவிய அளவில் 1 நாள் வேலை நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவித்தது. இது தொடர்பாக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், திட்டமிட்டபடி நாளை நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த வேலை நிறுத்தத்தில் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தவிர, மற்ற தேசியமயமாக்கப்பட்ட இந்தியன் வங்கி உள்ளிட்ட அனைத்து வங்கி பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். அதேசமயம் வங்கி அதிகாரிகள் சங்கத்தினர் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த போராட்டம் காரணமாக வங்கிகளில் பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகளில் பாதிப்பு இருக்கும். இதுகுறித்து அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் சி.ஹெச்.வெங்கடாசலம் கூறியதாவது: அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் கடந்த 1946ம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து வங்கி ஊழியர்களின் பல்வேறு உரிமைகள், கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபட்டு வருகிறது. தொடர்ந்து 11 முறை இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் வங்கி ஊழியர்களின் ஊதியம், வேலை ஒப்பந்தம், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துதல், வங்கிகளில் கணினிமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
ஆனால், பின்னாளில் சில வங்கிகள் இருதரப்பு ஒப்பந்தங்களை மதிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கின்றன. உதாரணமாக, கடந்த 2005-ம் ஆண்டு வங்கி ஊழியர் சங்கம் – இந்திய வங்கிகள் கூட்டமைப்பு இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, எந்த வங்கிக் கிளைகளில் கூடுதல் ஊழியர்கள் உள்ளார்களோ அவர்களை, ஊழியர் பற்றாக்குறை உள்ள வங்கிக் கிளைகளுக்கு மாற்ற வேண்டும். இதன்மூலம், அனைத்து கிளைகளிலும் சமமான ஊழியர்கள் இருப்பார்கள். சில வங்கிகள் இந்த ஒப்பந்தத்தை மீறி, ஊழியர்களை வெளியூர்களுக்கு இடமாற்றம் செய்கிறது. ஒரு வங்கியில் 3 ஆயிரம் ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இது தொழிலாளர் சட்டத்தை மீறும் செயல். பணம் கொண்டு செல்லும் ஊழியர், துப்புரவு ஊழியர் ஆகிய பணிகளுக்கு நிரந்தர ஊழியர்களை நியமிப்பதற்கு பதிலாக அயல்பணி மூலம் தனியாருக்கு வழங்க சில வங்கிகள் முடிவு செய்துள்ளன.
ஒரு முன்னணி வங்கி பொதுமக்களிடம் வைப்புத் தொகை வசூலிக்கும் பணியில் ஈடுபட்ட 240 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததுடன், அவர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கவில்லை. இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் வேலைநிறுத்தம் செய்வதற்காக வங்கி ஊழியர் சங்கம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து, மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் கடந்த 5ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர், டெல்லியில் தலைமை தொழிலாளர் நலத் துறை ஆணையருடன் கடந்த 10ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், வங்கிகளின் நிர்வாகத் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், தலைமை தொழிலாளர் நலத் துறை ஆணையரின் கோரிக்கையை ஏற்று, கடந்த 16ம் தேதி வங்கிகள் கூட்டமைப்புடன் மும்பையில் மீண்டும் ஒரு சுற்று பேச்சு நடந்தது.
இதில், கோரிக்கைகளுக்கு தீர்வு ஏற்படாததால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. எனவே, திட்டமிட்டபடி நாடு முழுவதும் வரும் 19ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். நாளை 3வது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வேலை நாள். இதனால் நாளை அறிவித்தபடி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் இந்த போராட்டத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அதே சமயம், இந்த போராட்டத்தில் தனியார் வங்கி பணியாளர்கள் பங்கேற்கவில்லை. இதனால் தனியார் வங்கிகள் வழக்கம் போல் நாளை செயல்படும்.