எப்படி மோடிக்கு இது தோன்றியது: வியந்த இளையராஜா!

தமிழகத்துக்கும், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கும் (காசி) இடையே நீண்டகால தொடர்பு உள்ளது. இந்த தொடர்பை வலுப்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக வாரணாசியில் ஒரு மாத காலம் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகள் நவம்பர் 11ஆம் தேதி (இன்று) முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை ஒருமாத காலம் நடைபெறவுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இந்த சங்கமத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். வாராணசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில், உத்தரப்பிரதேச முதல்வர், அம்மாநில ஆளுநர், இளையராஜா, தமிழத்தை சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது, அதனை பிரதமர் மோடி உள்பட அனைவரும் கேட்டு ரசித்தனர். விழாவில் பேசிய இளையராஜா, “காசி நகருக்கும், தமிழுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. முத்துச்சாமி தீட்சிதருக்கு இங்கு கிடைத்த வீணை இன்னும் உள்ளது. துளதிதாசர் தோஹா வழியில் ஆன்மீக பாடல்களை இரண்டு வரிகளில் 2 அடிகளில் பாடியுள்ளார். அதேபோல் தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் மனிதர்களின் வாழ்வியல் முறைகளை மூன்று அதிகாரங்களாக பிரித்து அய்யன் வள்ளுவன் இரண்டு வரிகளில் 2 அடிகளில் திருக்குறளை இயற்றியுள்ளார்.” என்றார்.

தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையே பல்வேறு தொடர்புகள் இருக்கும் நிலையில், பெருமைமிகு இந்த காசி நகரிலே, காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்த பிரதமர் மோடிக்கு எப்படி தோன்றியது என்பதை பார்த்து வியந்து கொண்டிருப்பதாகவும் இளையராஜா தெரிவித்துள்ளார். காசியை போலவே தமிழ்நாடும் பழமையான வரலாறு உடையது என்றும் இளையராஜா சுட்டிக்காட்டினார்.

அண்மைக்காலமாகவே இசையமைப்பாளர் இளையராஜா பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் அக்கட்சிக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவருக்கு நியமன எம்.பி., பதவி கொடுத்து அக்கட்சி அழகு பார்த்த நிலையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடியை இளையராஜா புகழ்ந்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.