சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா கடந்த நவம்பர் 7ம் தேதி மூட்டு வலி பிரச்சனை காரணமாக கொளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை அடுத்து பிரியா ஆபத்தான நிலையில் கடந்த 8ம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிரியா கடந்த 11ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் பால் ராம்சங்கர், சோமசுந்தரம் ஆகியோர் பணியிட நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால் இருவரும் தலைமறைவாக உள்ளனர். இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர்கள் சார்பில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இன்று மதியம் விசாரணை நடத்தியது.
தலை மறைவாக உள்ள டாக்டர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இரு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த பிறகு மேலும் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாகவும், இந்த வழக்கில் சம்பந்தமில்லாத டாக்டர்களின் குடும்பத்தினர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கிற்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கப்படும் எனவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மருத்துவர்கள் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்பதால் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும். இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. டாக்டர்கள் சரணடைவதற்காக காவல் நிலையம் செல்வதற்கு கூட ஆபத்தான சூழல் உண்டாகியுள்ளது. டாக்டர்களுக்கு தொலைபேசியின் மூலம் மிரட்டல் வருவதாகவும் டாக்டர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
டாக்டர் தரப்பின் வாதங்களை கேட்ட நீதிபதி சம்பவம் தற்போது தான் நடைபெற்றுள்ளதால் காவல்துறையினர் விசாரிக்க கால அவகாசம் தேவைப்படும் என கருத்து தெரிவித்தனர். இதன் காரணமாக டாக்டர்களுக்கு முன் ஜாமின் வழங்க நீதிபதி மறுத்துவிட்டார். மேலும் முன் ஜாமீன் கோரிய டாக்டர்களின் மனுக்கள் மீதான விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.