சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த ‛சின்ன கலைவாணர்' விவேக் பிறந்த தினம் இன்று

சிந்தனை கருத்துக்களால் ரசிகர்களை கவர்ந்த, 'சின்ன கலைவாணர்' விவேக் பிறந்த தினம் இன்று. துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணியில், அங்கய்யா பாண்டியன் – மணியம்மாள் தம்பதிக்கு மகனாக, 1961ல் இதே நாளில் பிறந்தவர் விவேகானந்தன் எனும் விவேக். ஊட்டி கான்வென்டிலும், பின், மதுரை அமெரிக்கன் கல்லுாரியிலும் படித்தார். இசைக்கருவிகள் வாசிப்பது, பரதநாட்டியம் ஆடுவதில் தேர்ந்தவர். கலாகேந்திரா கோவிந்தராஜன் வாயிலாக, இயக்குனர் கே.பாலசந்தருக்கு அறிமுகமானார்.

இவரின் நாட்டியம், பலகுரல் திறமையை அறிந்த பாலசந்தர், மனதில் உறுதி வேண்டும் படத்தில் வாய்ப்பளித்தார். நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்த இவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வேண்டுகோளை ஏற்று, மரக்கன்றுகள் நடுவதை இயக்கமாக்கினார். புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், துாள், வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில், நகைச்சுவையால் முத்திரை பதித்தார். 'பத்மஸ்ரீ' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், 2021 ஏப்ரல் 16ல் தன் 59வது வயதில் மாரடைப்பால் காலமானார்.

சிந்தனை கருத்துக்களால் ரசிகர்களை சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்த விவேக் இன்று இல்லையென்றாலும் அவர் தந்த படைப்புகள் என்றும் காலம் முழுக்க பேசும். அதோடு அவர் முன்னெடுத்த மரக்கன்று நடும் பணி இன்னும் பலதலைமுறைக்கும் பயன் தரும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.