கொடைக்கானல்: வானில் சூரியனை சுற்றி இன்று காலை ஒளிவட்டம் தெரிந்தது. இந்நிகழ்வை கொடைக்கானல் பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் இன்று காலை சூரியனை சுற்றி ஒளி வட்டம் தென்பட்டது சில மணி நேரங்கள் மட்டுமே இந்த ஒளிவட்டம் தென்பட்டது. இந்நிகழ்வை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
இது குறித்து கொடைக்கானல் வானியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி கூறுகையில், ‘‘சூரியனையோ அல்லது நிலவை சுற்றியோ தென்படும் பிரகாசமான ஒளி வளையத்தை 22 டிகிரி சூரிய ஒளிவட்டம் என்று கூறுகிறோம். இது பெரும்பாலும் முற்பகல் பொழுதில் காணப்படும். இவற்றில் ஒளி சிதறலின் – ஒளி அடர்த்தி தன்மையைப் பொறுத்து பிரதான மற்றும் துணை வட்டங்கள் தோன்றும்.
பூமி வளிமண்டலத்தின் உயர்ந்த மேற்பரப்பில் உருவாகின்ற மெல்லிய மேகங்கள் சிற்றஸ் எனப்படுகிறது. சில சமயங்களில் இவற்றில், 20 மைக்ரான் அளவுக்கும் குறைவான நுண்ணிய பனித்துகள்களால் சூரிய கதிர்கள் ஒளிச்சிதறல் அடைகின்றன. பணி துளிகளால் ஏற்படும் ஒளிச்சிதறல்கள் தான் ஒளிவட்டம் உருவாக காரணமாகும். இதன் முழுவட்ட பரிமாணம் 44 டிகிரி அளவில் இருக்கும். ஆனால் ஒளிவட்டதின் ஆர அளவை கருத்தில் கொண்டு உலகம் முழுவதும் இது 22 டிகிரி சூரிய ஒளிவட்டம் என்று அழைக்கப்படுகிறது’’ என்றார்.