தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி வெளியிட்டது.
இதில் 18 துணை கலெக்டர்கள், 26 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர், 25 வணிகவரி உதவி ஆணையர், 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகியவை அடங்கும்.
இந்த பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், கடந்த மாதம் அக்டோபர் 30-ந்தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வு சில காரணங்களுக்காக தள்ளிவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது.
இந்நிலையில் தள்ளிவைக்கப்பட்ட முதல்நிலைத் தேர்வு இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றது. இதற்காக மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த தேர்வை எழுத 3,22,414 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 1,90,957 பேர் மட்டுமே எழுதியுள்ளனர். 1,31,457 பேர் தேர்வு எழுத வரவில்லை எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.