திகார் சிறையில் சத்யேந்திர ஜெயினுக்கு சகல வசதிகள்? – மணீஷ் சிசோடியா விளக்கம்!

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு, உடல்நிலை சரியில்லாத காரணமாகவே பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டதாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் சத்யேந்திர ஜெயின். இந்நிலையில், இவர் மற்றும் குடும்பத்தினர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒன்றரை கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இது தொடர்பாக அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தியது. இந்நிலையில், கடந்த மே மாதம் ஹவாலா பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறையினர் டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினை கைது செய்தனர். கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்தின் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜாமின் வழங்கக் கோரி சத்யேந்திர ஜெயின் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த நிலையில், சிறையில் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் விதிகளை மீறி சொகுசு வசதிகளை அனுபவித்து வருவதாக அமலாக்கத் துறை குற்றம் சுமத்தியது. இதை அடுத்து அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு சிறப்பு சலுகை அளித்த புகாரில் திகார் சிறையின் கண்காணிப்பாளர் அஜித் குமார் கடந்த வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், திகார் சிறையில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ஒருவர் மசாஜ் செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கூறுகையில், “முதுகுத் தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்துள்ளதால் சத்யேந்திர ஜெயினுக்கு பிசியோதரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறையில் அவருக்கு சகல வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை,” என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.