திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம் இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பாரம்பரிய பண்டிகையன்று வீடுகளில் தீபங்கள் ஏற்றப்படும். அந்த தீப ஒலிகள் தீய சக்திகளை விரட்டும் திறன் கொண்டவை என்பது இந்துக்களின் நம்பிக்கை. இந்த ஆண்டு கார்த்திகை தீபம் டிசம்பர் 6 ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று கொண்டாடப்படவுள்ளது.

குறிப்பாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வர சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள்.

இந்தாண்டு வரும் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கவுள்ள நிலையில் 6 ஆம் தேதி மாலை மெகா தீபம் ஏற்றப்படும். இந்த முறை திருவண்ணாமலைக்கு 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச்செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது, திருவண்ணாமலையில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள்,பாதுகாப்பு ஏற்பாடுகள்,போக்குவரத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.