பிரதமர் மோடியால் குஜராத்தில் கலவரம் இல்லாதநிலை உருவாகியுள்ளது – மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்

சூரத்: “பிரதமர் மோடியால் குஜராத்தில் இன்று கலவரம் இல்லாத நிலை உருவாகியுள்ளது” என்று மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.

குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அனுராக தாக்கூர் பாஜகவிற்காக பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு அவர் பல்வேறு பேரணி, கூட்டங்களில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: குஜராதில் இன்று கலவரம் இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளது. அதற்கு பாஜக ஆட்சியும், பிரதமர் மோடியும் தான் காரணம். குஜராத் அதிக வளர்ச்சி அடையும் போது இந்தியாவும் அதிக வளர்ச்சி அடையும். குஜராத் வெற்றி பெற்றால் அது நாட்டின் வெற்றியாகும்.

ஜேன்என்யுவில் நாட்டை பிளவு படுத்த முயற்சி செய்தவர்களுடன் ராகுல் காந்தி நின்று விட்டு, தற்போது சாவர்க்கர் மீது கேள்விகள் எழுப்புகின்றார். இதுதான் காங்கிரஸ் மனநிலை. அவர்கள் அவர்களின் குடும்பத்தைத் தாண்டி வேறு எதையும் யோசிப்பதே இல்லை. காங்கிரஸ் சாதி, மதம் ஆகியவைகளின் அடிப்படையில் மக்களைப் பிரித்து ஆட்சி செய்தது. 60 ஆண்டுகளாக இப்படிதான் அவர்கள் ஆட்சி செய்தார்கள்.

‘குஜராத் மாதிரி’ என்பது முதன்மையான மாதிரி அது வளர்ச்சியின் மாதிரி. காங்கிரஸ் கட்சி சாதி, இனம், மதத்தின் அடிப்படையில் வாக்குகள் கேட்கிறது. பாஜக நல்ல ஆட்சி, வளர்ச்சியின் அடிப்படையில் செயல்படுகிறது” இவ்வாறு அமைச்சர் பேசினார்.

குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது இதனை முன்னிட்டு அங்கு பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. இதனை முன்னிட்டு பாஜகவின் ஒட்டுமொத்த பலத்தை நிரூபிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 89 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டது. அக்கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா, உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மா, அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்ட 15 மத்திய அமைச்சர்கள் வெள்ளிக்கிழமை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.