பேரத்தில் ஈடுபட்டதா பாஜக…? – தெலுங்கானாவில் முக்கிய நிர்வாகிக்கு சம்மன்

தெலங்கானா மாநிலத்தில், ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் (டிஆர்எஸ்)  நான்கு எம்எல்ஏக்களை பாஜக பேரம் பேசுவதாகக் குற்றஞ்சாட்டி, ஒரு வீடியோ ஒன்றை அம்மாநில முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் கடந்த நவ. 4ஆம் தேதி வெளியிட்டிருந்தார். 

சுமார் ஒருமணிநேரம் கொண்ட வீடியோ உள்ளதாக தெரிவித்த அவர், மேலும், அதன் 5 நிமிட காட்சியை மட்டும் செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.  டிஆர்எஸ் கட்சியின் எம்எல்ஏக்களை பண்ணை வீடு ஒன்றில் சந்தித்த இடைத்தரகர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பெயரை 20 முறையும், பிரதமர் மோடியின் பெயரை 3 முறையும் குறிப்பிட்டதாக ராஜசேகர் ராவ் கூறினார். தொடர்ந்து, கர்நாடக அரசு மாற்றம் குறித்தும் அதில் பேசியதாக அவர் தெரிவித்திருந்தார்.

பின்னர், முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் முன்வைத்த குற்றச்சாட்டை தொடர்ந்து, 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களை கைதுசெய்தனர். இதையடுத்து, இந்த விவகாரத்தில் போலீசார் விசாரணை தொடரலாம் என்றும் விசாரணையை நீதிபதி ஒருவர் கண்காணிப்பார் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் முன்வைத்த குற்றச்சாட்டின் படி, டிஆர்எஸ் கட்சியின் நான்கு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்றதற்கு தொடர்புடைய பாஜக மூத்த நிர்வாகி பிஎல் சந்தோஷிற்கு போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர் 

அதன்மூலம், வரும் நவ. 21ஆம் தேதிக்குள் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் இல்லையென்றால், அவர் மீது கைது நடவடிக்கை பாயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மன் வழங்கப்பட்ட சந்தோஷ், பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் (அமைப்பு) ஆவார்.

முன்னதாக, இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றக்கோரி பாஜக தொடர்ந்த வழக்க, அம்மாநில உயர் நீதிமன்றம் நிராகரித்து, நீதிபதி தலைமையில், மாநில காவல்துறையின் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.