திருவல்லிக்கேணி நல்லதம்பி தெருவில் வசித்து வருபவர் சிவாரெட்டி(27). இவரது மனைவி லலிதா (22). ஆந்திராவை பூர்விகமாக கொண்ட இவர்களுக்கு திருமணமாகி 1 ஆண்டுகள் ஆகிறது. மெரினா கடற்கரையில் அமைந்துள்ள INS அடையார் கடற்படை தளத்தில் சிவாரெட்டி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை தனது 8 மாத கர்ப்பிணியான மனைவி லலிதாவுடன் இருசக்கர வாகனத்தில் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். பின்னர் கடற்கரையில் இருந்துவிட்டு இரவு 8.30.மணியளவில் இருவரும் பைக்கில் புறப்பட்டு வீட்டிற்கு சென்ற போது, காமராஜர் சாலை மாநிலக்கல்லூரி அருகே வந்துள்ளனர். அப்போது பின்னால் வந்த கடற்படைக்கு சொந்தமான பேருந்து பைக் மீது மோதியதில், லலிதா இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
அப்போது கண் இமைக்கும் நேரத்தில் அதே பேருந்து லலிதா தலையில் ஏறி இறங்கியதில் மூளை சிதறி சம்பவயிடத்திலேயே பலியானார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் செய்வதறியாது தவித்த நிலையில் மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிறைமாத கற்பிணியான லலிதாவின் வயிற்றில் இருக்கும் குழந்தையை காப்பாற்ற லலிதாவின் உடலை மீட்டு திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் உயிரிழந்த லலிதாவின் உடலை உடற்கூராய்வுக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்த INS கடற்படை வீரரான சிவா ரெட்டியை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனிடையே விபத்து ஏற்படுத்திய INS பல்லவா பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து கல்லால் அடித்து சேதப்படுத்தினர். INS கடற்படை தளத்துக்கு சொந்தமான பேருந்து மோதி INS கடற்படை வீரரின் மனைவி உயிரிழந்த தகவலை அறிந்த INS கடற்படை உயர் அதிகாரிகள் விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிவா ரெட்டியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த விபத்து சம்பந்தமாக அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து INS கடற்படை தளத்துக்கு சொந்தமான INS பல்லவா பேருந்தை இயக்கி வந்த ராஜேஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.