மலைச்சாலையில் கார் கவிழ்ந்து உத்தரகாண்டில் 12 பேர் பலி

டேராடூன்: ஜோஷிமாத் பகுதியில் மலைச்சாலையில் சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து 300 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் பலியாகினர். உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் பல்லா ஜாக்கோல் என்ற கிராமத்துக்கு நேற்று மாலை ஒரு காரில் 16 பேர் பயணித்தனர். காருக்குள் இடநெருக்கடியுடன் சென்ற அவர்களில் சிலர் காரின் மேற்பகுதியிலும் அமர்ந்து பயணித்தனர்.

இந்நிலையில் ஜோஷிமாத் பகுதியில் உர்காம் என்ற இடத்தின் மலைச்சாலையில் கார் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து 300 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணித்தவர்களில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர். இருந்தும் கார் கவிழ்ந்த விபத்தின் போது, கடைசி வினாடியில் காரில் இருந்து குதித்த 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். தகவலறிந்த மீட்புக் குழுவினர் பள்ளத்தாக்கில் கிடந்த காரையும், உயிரிழந்தவர்களின் சடலங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.