கோவை மாவட்டதில் சிந்தாமணி ரேஷன் கடையில் இரண்டு மற்றும் ஐந்து கிலோ கேஸ் சிலிண்டர் விற்பனை துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு விற்பனையை துவங்கி வைத்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன் “நடப்பு நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடப்பு நிதியாண்டில் 9.51 லட்சம் விவசாயிகளுக்கு 7,166 கோடி ரூபாய் விவசாய கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பு நிதியாண்டில் 1.56 லட்சம் புதிய விவசாயிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1.28 லட்சம் விவசாயிகளுக்கு 848 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று 1.76 லட்சம் விவசாயிகளுக்கு 801 கோடி ரூபாய் கால்நடை கடன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் உள்ள 1.17 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2,755 கோடி கடன் தள்ளுபடிக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோன்று நடப்பு நிதி ஆண்டில் 14,451 புதிய மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 471 கோடி ரூபாய்க்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை சார்பில் 66 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வைப்பு நிதி வைக்கப்பட்டுள்ளது” என கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.