வீடுகட்ட வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாததால் கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு

கோபிசெட்டிபாளையம்; வங்கிக் கடனை திருப்பி செலுத்த முடியாததால் கணவன் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி, இவர் கவுந்தப்பாடியில் உரக்கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு சித்ரா என்ற மனைவியும், கார்த்திக் ராஜா (21) என்ற மகனும் உள்ளனர். கார்த்திக் ராஜா டிப்ளமோ முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த சில மாதங்களாக வேலை செய்து வந்துள்ளார்.
image
இந்நிலையில் திருமூர்த்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோபியில் உள்ள வங்கி ஒன்றில் கடன் பெற்று அய்யம்பாளையத்தில் வீடு கட்டியுள்ளார். இதையடுத்து உரக்கடை சரியான வருமானம் இல்லாத நிலையில், வீடு கட்டுவதற்காக வங்கியில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் இருந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து கடன் தொகையை உடனடியாக செலுத்த வங்கி நிர்வாகம் கூறியதை அடுத்து தனியார் நிறுவனத்திடம் கடன் பெற திருமூர்த்தி முயற்சி செய்துள்ளார். ஆனால் அங்கும் கடன் கிடைக்காத நிலையில் திருமூர்த்தியும், அவரது மனைவியும் நேற்றிரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
image
இதுகுறித்து தகவல் அறிந்த கவுந்தப்பாடி காவல் துறையினர் அங்கு சென்று கணவன், மனைவியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் பிரச்னை காரணமாக கணவன் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அய்யம்பாளையத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.