விருத்தாசலத்தில் மாயமான இரு சக்கர வாகனத்திற்கு அபராத குறுந்தகவல் வந்ததையடுத்து, யார் பயன்படுத்துகிறார்கள் என்று தேடிச்சென்றவருக்கு நாகை மாவட்ட காவலர் ஒருவர் பயன்படுத்திவருவது தெரியவந்துள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், கடந்த ஓராண்டுக்கு முன் மாயமான இருசக்கர வாகனம் ஹெல்மெட் அணிய வில்லை, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று வந்த குறுந்தகவல் மூலம், யார் பயன்படுத்தி வருவது என்பது அம்பலமாகி உள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த வேட்டைக்குடி பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (40). விவசாயக் கூலி தொழிலாளியான அவர், கடந்த 2018 ஆண்டு, ஜூலை 7ம் தேதி, டி.வி.எஸ் அப்பாச்சி பைக் வாங்கி, டிஎன் 91 டி 1143 என்ற பதிவு எண்ணுடன் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு, டிசம்பர் 10ம் தேதி இரவு, விருத்தாசலம் சாவடி குப்பத்தில் உள்ள சகோதரர் வீட்டுக்கு முன்பு பைக்கை நிறுத்தி இருந்தபோது, பைக் மாயமானது.
பின்னர் பைக் திருடுபோனது குறித்து, வெற்றிவேல் விருத்தாசலம் காவல் துறையினரிடம் புகார் அளித்ததன் பேரில் ரசீதும் வழங்கினர்.
இந்த நிலையில் கடந்த மாதம் அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் ஹெல்மெட் அணியவில்லை என்றும், அதற்காக 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்த குறுந்தகவல் நாகப்பட்டினம் காவல்துறை அனுப்பியதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வெற்றிவேல் தனது நண்பர்களுடன் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பைக்கை தேடி அங்கு சென்றார். அப்போது வாய்மேடு போலீசார் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.
பின்னர் அந்த இருசக்கர வாகனத்தை வைத்திருப்பவர் யார் என்று தனது செல்போனில் படம் எடுத்த வெற்றிவேல், திருடு போன வாகனம் போலீசார் பயன்படுத்தி வருவதாக போட்டோ ஆதாரத்துடன் தஞ்சாவூர் டிஐஜி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளர். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலகத்தில் தெரிவித்ததாக வெற்றிவேல் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
