சிறுமியை விரட்டி காதல் இளைஞரின் உடையை கழற்றி புரட்டி எடுத்த பெண் போலீசார்! இளைஞரின் விபரீத முடிவு..!

17 வயது சிறுமிக்கு காதல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல் நிலையம் அழைத்துச்சென்ற மகளிர் போலீசார் , அரை நிர்வாணப்படுத்தி தாக்கியதால் அவமானத்துக்குள்ளான இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி உறவினர்கள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே மடப்புரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா – மாதா தம்பதியினரின் மகன் 22 வயதான ராகுல்ராஜ். இவர், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

காதல் குறித்து தகவல் அறிந்த சிறுமியின் குடும்பத்தினர், தங்கள் மகளுக்கு ராகுல்ராஜ் காதல் தொல்லை கொடுப்பதாக திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ராகுல்ராஜை அழைத்து விசாரித்த போலீசார், அவரை அடித்து அவமானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த ராகுல்ராஜ் சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அவரது குடும்பத்தினர், ராகுல்ராஜை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து ராகுல்ராஜின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், 100க்கும் மேற்பட்டோர் கதறி அழுதபடியே திருவாரூர் எஸ்.பி. அலுவலகத்திற்குள் புகுந்து தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த திருவாரூர் டிஎஸ்பி மற்றும் போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி திருவாரூர் தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ராகுல்ராஜின் தந்தை ராஜா, தனது மகன் ராகுல் ராஜை விடுவிக்க , அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாலட்சுமி 20,000 ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில், 5,000 ரூபாய் கொடுத்ததாகவும், அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு விசாரணை என்ற பெயரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், அரை நிர்வாணப்படுத்தி அடித்து அவமானப்படுத்தியதால், மனம் உடைந்து தங்கள் மகன் தற்கொலை செய்து கொண்டதாகவும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

ராகுல்ராஜை தாக்கிய புகாருக்குள்ளாகி இருக்கும், அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் எனக் கூறி தொடர்ந்து போராட்டத்தில் ராகுல் ராஜின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் 17 வயது சிறுமியான மைனர் பெண்ணை காதலித்தால் தண்டனைக்குரிய குற்றம் என்பதை சட்டப்பூர்வமாக எடுத்துக்கூறி, போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருந்தால், இது போன்ற வீண் பிரச்சனைகள் நிகழ்ந்திருக்காது என்று சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.