தமிழகத்தில் உள்ள பல்வேறு அனைத்து கலை வடிவங்களையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொண்டுவரும் விதமாகவும், பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதே இந்தக் கலைத் திருவிழாவின் குறிக்கோள் ஆகும்.
அந்த வகையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ – மாணவிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் இந்த கலைத் திருவிழா நடத்தப்பட உள்ளது.
அதன்படி, இன்று முதல் சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் கலந்துகொள்ளும் கலைத் திருவிழா போட்டி ஆரம்பமாகிறது.
பள்ளி அளவில் இன்று முதல் 28-ந்தேதி வரையிலும், வட்டார அளவில் 29-ந்தேதி முதல் அடுத்த மாதம் 5-ந்தேதி வரையிலும், மாவட்ட அளவில் அடுத்த மாதம் 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையிலும், மாநில அளவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி முதல் 9-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது. இந்த கலைத் திருவிழாவில் மாணவ-மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.