பாக்., ராணுவ தளபதி மாறுகிறார் போட்டியில் 6 மூத்த அதிகாரிகள்| Dinamalar

இஸ்லாமாபாத்,பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதி ஜெனரல் குமர் ஜாவத் பஜ்வா, ௬௧, ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய தளபதி பதவிக்கு, ஆறு மூத்த அதிகாரிகளின் பெயர் பரிசீலனையில் உள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்திருந்தாலும், ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே அரசு இருந்து வருகிறது.

இந்நிலையில், பாக்., ராணுவத்தின் தளபதியாக உள்ள ஜெனரல் பஜ்வாவின் பதவிக் காலம், வரும் ௨௯ம் தேதி முடிவுக்கு வருகிறது.

இதையடுத்து, ராணுவ தளபதி மற்றும் கூட்டுப் படைகளின் தலைவர் பதவிக்கு நியமனம் செய்யப்பட உள்ளது. இதற்காக, ஆறு மூத்த அதிகாரிகளின் பெயர்களை, ராணுவம் அனுப்பியுள்ளதாக பிரதமர் அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.

இதில், இரண்டு பேர் இந்தப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். கூட்டுப் படைகளின் தலைவர் பதவி தான் உயர்ந்த பதவி.

இருப்பினும், அனைத்து முடிவுகளையும் ராணுவத் தளபதியே எடுப்பார்; அவருக்குத் தான் அதிக அதிகாரம் உள்ளது. இந்தப் பதவிகளுக்கு உரியோரை, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுப்பார்.

இது தொடர்பாக, சமீபத்தில் ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் வசிக்கும் தன் சகோதரரும், பாக்., முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீபுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனும் அவர் ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் பரிந்துரைகளை ஏற்று, அதிபர் ஆரிப் ஆல்வி, புதிய தளபதியை நியமிப்பார். இந்த வாரத்துக்குள் இந்த நியமனம் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.