மீண்டும் இளைஞரணி செயலாளரானார் உதயநிதி – திமுக அறிவிப்பு

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியின் எம்.எல்.ஏவாக இருக்கும் உதயநிதி கடந்த 2019ஆம் ஆண்டு திமுகவின் இளைஞரணி செயலாளராக முதல்முதலில் நியமனம் செய்யப்பட்டார். அதனையடுத்து இளைஞர்களை திமுக பக்கம் திருப்பும் விதமாக உதயநிதி சிறப்பாக செயல்பட்டதாக கட்சியினர் பாராட்டு பத்திரம் கொடுத்துவருகின்றனர். 

இந்தச் சூழலில் உதயநிதி மீண்டும் திமுகவின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல், இளைஞரணி துணைச் செயலாளர்களாக ஜோயல் உள்பட 9 பேர் நியமிக்கப்படுவதாக திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை விடுத்துள்ளார். இதேபோல், திமுக மகளிர் அணி தலைவராக விஜயா தாயன்பன், மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

திமுகவின் மகளிர் அணி செயலாளராக இருந்த கனிமொழி, அண்மையில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரானார். துணைப் பொதுச்செயலாளர் ஆன பிறகும் மகளிர் அணி செயலர் பொறுப்பை கனமொழி கவனித்து வந்தார். தற்போது இரண்டு பொறுப்புகளை கவனிப்பது கடினம் என்பதால் மகளிரணி செயலாளர் நாற்காலிக்கு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹெலன் டேவிட்சன் வந்திருக்கிறார். 

இரண்டாவது முறையாக இளைஞரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் உதயநிதிக்கும், மகளிரணி செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ஹெலனுக்கும் கட்சியினர் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர். இதுகுறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “இளைஞரணி பதவியை மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.