தமிழ் மற்றும் தெலுங்கு என பைலிங்குவல் படமாக உருவாகியிருக்கிறது வாரிசு. வம்சி பைடிபள்ளி இயக்கியிருக்கும் இப்படத்தை தில்ராஜு தயாரித்திருக்கிறார். தமன் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இதன் சிங்கிள் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்துவரும் சூழலில் படம் பொங்கலுக்கு வெளியாகுமென்று தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் ஆந்திராவில் வாரிசு படத்துக்கு குறைவான திரையரங்குகளே ஒதுக்கப்படுமென தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது. இதனால் வாரிசு படம் பொங்கல் ரேஸில் கலந்துகொள்ளுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.
அதேசமயம் துணிவு படமும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும், லைகா நிறுவனம் வெளிநாடுகளிலும் வெளியிடுகிறது. சூழல் இப்படி இருக்க வாரிசு படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவானது.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய உதயநிதி வாரிசு படத்தை நாங்கள் வாங்கவில்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.
ஏற்கனவே துணிவு படத்துக்காக தமிழ்நாட்டில் 800 தியேட்டர்களை ரெட் ஜெயண்ட் நிறுவனம் லாக் செய்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அது எந்தளவு உண்மை என தெரியவில்லை. அஜித்துக்கு இணையான ஹீரோ விஜய் என்பதால் இரு படங்களுக்கும் சம அளவிலான தியேட்டர்களே ஒதுக்கப்படுமென திரை ஆர்வலர்கள் தெரிவித்துவருகின்றனர்.
இதற்கிடையே தமிழ்நாட்டில் துணிவுடன் போட்டி வேண்டுமென்றால் பலமான விநியோகஸ்தர் வேண்டுமென விஜய்யும், வாரிசு தயாரிப்பாளரும் திட்டமிட்டதாகவும் அதன்படியே சில மாவட்டங்களில் வாரிசு படத்தை உதயநிதி வெளியிடுகிறார் எனவும் கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு தெலுங்கு தயாரிப்பாளர்கள் கவுன்சில் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் தில் ராஜு, “பொங்கல் மற்றும் தசரா பண்டிகையின்போது அதிகளவில் டப்பிங் செய்யப்பட்ட படங்களுக்கே திரையரங்குகள் ஒதுக்கப்படுகின்றன.
நேரடி தெலுங்கு படத்திற்கு டப்பிங் படங்களைவிட கம்மியான அளவில்தான் திரையரங்குகள் ஒதுக்கப்படுகின்றன. தெலுங்கு சினிமாவை நிலைநிறுத்த வேண்டுமானால் இனிமேல் நேரடி தெலுங்கு படங்களுக்கே அதிக முன்னுரிமை கொடுத்து திரையரங்குகளை அதிகமாக ஒதுக்கவேண்டும் என்றும் மிச்சம் இருக்கும் திரையரங்குகளை டப்பிங் படங்களுக்கு ஒதுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்