கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு.. இன்று முதல் ரூ.1000 நிவாரணத் தொகை.! 

சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணத் தொகை இன்று முதல் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் முதல் தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

இதில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் மட்டும் சுமார் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆறு மணி நேரத்தில் 44 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால், சீர்காழி மற்றும் அதனை சுற்றியுள்ள 32 கிராமங்களில், வெள்ளிநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. 

இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். இதனையடுத்து சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 இழப்பீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அந்த வகையில், சீர்காழி மற்றும் தரங்கம்பாடி ஆகிய 2 தாலுகாக்களில் உள்ள 239 ரேஷன் கடைகளில் 1,61,647 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதற்காக ரூ.16.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணத் தொகை இன்று  முதல் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.