தமிழகம் முழுவதும் சாலைகளை மேம்படுத்த ரூ.2,200 கோடி நிதி – முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் சாலைகளை மேம்படுத்த ரூ.2,200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவையில் கடந்த அக். 19-ம் தேதி விதி 110-ன் கீழ், நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்படும் பாதாள சாக்கடைத் திட்டங்கள் மற்றும் குடிநீர்க் குழாய் பணிகள் போன்றவற்றால் சேதமடைந்துள்ள சாலைகள் மற்றும் 2016-17-ம் ஆண்டுக்குப் பின்னர் மேம்படுத்தப்படாமல், பழுதடைந்த நிலையில் உள்ள பல்லாயிரக்கணக்கான கி.மீ. நீள சாலைகள் மேம்படுத்தப்படும் என்றும், இதற்காக தமிழக அரசின் சிறப்பு நிதியாக ரூ.2,200 கோடி ஒதுக்கப்பட்டு, 4,600 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மேலும், சிங்காரச் சென்னை 2.0, மாநில நிதிக் குழு மானியத் திட்ட நிதி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், நபார்டு வங்கி நிதியுதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிதிகளை ஒருங்கிணைத்து, ரூ.7,338 கோடி மதிப்பில், 16,390 கி.மீ. நீளமுள்ள சாலைகளும் படிப்படியாக மேம்படுத்தப்படும் எனவும் முதல்வர் அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில், வரும் நான்கு ஆண்டுகளில் தமிழக அரசின் சிறப்பு நிதியாக ரூ.2,200 கோடி ஒதுக்கி, இதர திட்ட நிதிகளை ஒருங்கிணைத்து, மொத்தம் ரூ.9,588 கோடியில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 20,990 கி.மீ. நீளமுள்ள சாலைகளை மேம்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

முதல்கட்டமாக 2023-ல் மொத்தம் ரூ.5,140 கோடி மதிப்பில், 12,061 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும். சென்னை மாநகராட்சியில் 1,680 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.1,171 கோடியிலும், இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 7,116 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.2,535 கோடியிலும், பேரூராட்சிகளில் 3,265 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.1,434 கோடியிலும் மேம்படுத்தப்படும். மீதமுள்ள சாலைகள் அடுத்த 2 ஆண்டுகளில் மேம்படுத்தப்படும்.

சாலைகள் அனைத்தும் தரமானதாகவும், மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றதாகவும் அமைக்கப்பட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சாலைகள் அமைக்கப்படுவதற்கான ஒருங்கிணைப்பு அமைப்பாக தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் நியமிக்கப்பட்டுள்ளது. தரமான சாலைகள் அமைக்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இந்த நிறுவனத்தால் இறுதி செய்யப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.