அரசு மருத்துவமனையில் சிசுவை கவ்விக்கொண்டு ஓடிய நாய்!!

அரசு மருத்துவமனை அருகில் நாய் ஒன்று சிசுவின் உடலை கவ்விச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேரி என்னும் இடத்தில் அரசு மகப்பேறு மருத்துவமனை அமைந்துள்ளது. அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாய் ஒன்று வாயில் எதையோ கவ்விக் கொண்டு சுற்றி திரிந்துள்ளது.

எதேச்சையாக பார்த்த ஒருவர், நாய் கவ்வியிருப்பது சிசுவின் உடல் என்று கண்டுபிடித்தார். இதனையடுத்து சிலர் நாயை விரட்டி சென்றனர். ஆனால் நாய் விடாமல் ஓடியது.

ஒருகட்டத்தில் வாயில் கவ்வியிருந்த சிசுவை கட்டிடத்தின் வாசலில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. பின்னர் அங்கிருந்தவர்கள் அதனை பார்த்து சிசுவின் சடலம் என்று உறுதி செய்தனர்.

தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த ஊழியர்கள் கருவை பரிசோதனைக்கு அனுப்பினர். அது 8 மாத ஆண் குழந்தையின் சடலம் என்று தெரியவந்துள்ளது.

தகவல் அறிந்து வந்த போலீஸார், விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் சிசிடிவி ஏதும் இல்லாததால், யார் குழந்தை என்று கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குழந்தை மருத்துவமனையில் இறந்த நிலையில், குடும்பத்தினர் பக்கத்தில் மண்ணில் புதைத்திருக்கலாம், அதை நாய் தோண்டி எடுத்திருக்கலாம் என போலீஸார் கூறியுள்ளனர். எனவே, இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.