மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படுவது கொடைக்கானல். கொடைக்கானல் என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது சுற்றுலா தான். இங்கு வித்தியாசமான பெரிய பெரிய மரங்களும், பசுமை போர்த்திய புல்வெளிகளும் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், கொடைக்கானலுக்கு என்று பல்வேறு அடையாளங்களும் உள்ளன.
அதுமட்டுமல்லாமல், இங்கு மூலிகைகளில் இருந்து அழகான பூக்கள் வரை அனைத்தும் இருக்கும். அதிலும் குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் பூ என்றால் அது குறிஞ்சி மட்டும் தான். நீல நிறத்தில் பூக்கும் குறிஞ்சி மலர்கள் மலைகளுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.
இந்த குறிஞ்சி பூவிலேயே ஏறக்குறைய 200 வகை பூக்கள் வகைகள் உண்டு. இதில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கக்கூடிய குறிஞ்சி மலர் “நீலக்குறிஞ்சி” என்று அழைக்கப்படுகிறது. அதில், ஒருவகையான பூ ஓடைக்குறிஞ்சி. இந்தப்பூ தற்போது கொடைக்கானலில் பூக்க தொடங்கி உள்ளது.
இந்த ஓடை குறிஞ்சிகள் ஒவ்வொரு வருடமும் பூக்கும் மலர் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேபோல், 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கக்கூடிய குறிஞ்சி மலர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு கொடைக்கானலில் பூத்தது. அதன் பிறகு 2030ல் பூக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தற்போது நீரோடைகளை ஒட்டி உள்ள பகுதிகளில் குறிஞ்சி மலர்களில் ஒருவகையாக உள்ள ஓடை குறிஞ்சிகள் பூக்க தொடங்கி இருக்கிறது. இந்த ஓடை குறிஞ்சி மலர்களிலேயே தற்போது பூத்துள்ள மலர்கள் மிகச் சிறிய மலர்களாகவும், மணி வடிவத்திலும் உள்ளதால் பாற்பொறைக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.
மேலும், தற்போது பூத்துள்ள பூக்கள் ஓடை குறிஞ்சிகளா அல்லது ஓடைக்குறிஞ்சிகளிலேயே வேறு ஏதும் வகைகளா? என்று தோட்டக்கலை துறையினர் ஆய்வுகளுக்கு உட்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் அந்த பூக்கள் அருகில் சென்று புகைப்படங்களும் எடுத்து செல்கின்றனர்.