தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கூடுதலாக 254 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பள்ளி கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி உபரியாக இருந்த முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் பொதுத்தொகுப்புக்கு மாற்றி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை ஏற்றவாறு கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை இறப்ப வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை 254 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை மீண்டும் தேவையாக உள்ள பள்ளிகளுக்கு நியமனம் செய்ய முடிவு செய்துள்ளது.
அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், வரலாறு, வணிகவியல், இயற்பியல் மற்றும் பொருளாதார பிரிவுகளில் கூடுதலாக 254 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதி அளித்து பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள தமிழக அரசு பள்ளிகளுக்கு விரைவில் ஆசிரியர் நியமனம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.