”சர்க்கரை நோயாளியா? உணவை இந்த வழியில் சாப்பிடுங்கள்”-அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறும் டிப்ஸ்

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்துக்குள்ள நோயாளிகள் உணவு உண்ணும் முறையை மாற்றியமைக்க வேண்டும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருக்கிறார்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நடைபெற்ற நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது, நிகழ்ச்சியின் போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சாப்பிடும் முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். அதாவது நாளொன்றுக்கு மூன்று வேளையாக சாப்பிடுவதை தவிர்த்து ஐந்து வேளையாக சாப்பிட வேண்டும்.
image
நானே நீரிழிவு நோயாளிதான். 25 ஆண்டுகளாக நீரிழிவு நோயுடன்தான் வாழ்ந்து வருகிறேன். 2004ம் ஆண்டு விபத்தில் சிக்கியபோது எனது கால் எலும்பு நொறுங்கியது. அப்போது நடப்பதும், தரையில் அமர்வதே சிரமாக இருந்தது. ஆனால் தொடர்ந்து முயற்சி செய்ததால், 2014ம் ஆண்டு மாரத்தான் போட்டியில் பங்கேற்றேன்.
உலகம் முழுவதும் நடந்த 134 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று ஓடியிருக்கிறேன். இந்தியாவில் உள்ள 24 மாநிலங்களில் நடந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்றிருக்கிறேன். அனைத்து மாநிலங்களிலும் நடக்கும் போட்டிகளில் ஓட வேண்டும் என்பதே என் விருப்பம்.
தினந்தோறும் 10 முதல் 15 கிலோமீட்டர் தொலைவுக்கு ஓடுகிறேன். நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பலனை அளிப்பது உணவும், உடற்பயிற்சியும்தான். நீரிழிவு நோய் வந்தால் போகாது. ஆனால் நீரிழிவு நோய் இருந்தாலும் எப்படி நல்ல முறையில் வாழ வேண்டும் என்பதற்காகவே இதுப்போன்ற விழிப்புணர்வு கண்காட்சிகள் இருக்கிறது.” என்று கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.