கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே ஏரிக்கரை ஒன்று அமைந்துள்ளது. இன்று அப்பகுயில் உள்ள முட்புதரில் மனித எலும்பு கூடு ஒன்று கிடந்தது. அந்த எலும்புக்கூட்டில் தலை, கை எலும்புகள் துண்டாக கிடந்தன. அந்த வழியாக சென்ற ஒருவர் அதனை பார்த்தார். பார்த்தவருக்கு அதிர்ச்சி உச்சத்திற்கு ஏற உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். அந்தத் தகவலின் அடிப்படையில் ஏரிக்கரைக்கு வந்த காவல் ஆய்வாளர் முருகேசனும், க் ஆவல் துறையினரும் எலும்புக் கூடுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அந்த எலும்புக்கூட்டில் கருப்பு நிற டி-சர்ட் மற்றும் பேண்ட் அப்படியே இருந்தது. அருகில் ஷுவும் கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். டி-ஷர்ட்டில் “சேலஞ்ச் 87 கிரியேட்டிவ் டன் இஸ்பெட்டர்” என்ற வாசகமும் எழுதப்பட்டிருந்தது. இறந்த நபர் யார்? ஆணா?பெண்ணா? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவர் இறந்து பல நாட்கள் இருக்கும் என்று தெரிகிறது.
யாரோ அவரை கடத்தி வந்து கொலை செய்து இங்கு வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணையை தொடங்கியிருக்கின்றனர். கைப்பற்றப்பட்ட எலும்புக் கூடை பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும், கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப் புற பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் மாயமானவர்கள் பற்றிய விவரத்தை வைத்தும் விசாரணை நடந்துவருகிறது. இந்தச் சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.