தமிழ்நாட்டில் மழைக்காலங்களில் பருவமழை பொய்க்கும் சமயங்களில் மழை பெய்ய வேண்டி பல்வேறு சடங்குகள் நடைபெறும். குறிப்பாக மழைச் செம்பு எடுத்தல், மழைக்கஞ்சி காய்ச்சுதல், கொடும்பாவி கட்டி எரித்தல், ஒப்பாரி வைத்தல், கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தல் போன்ற சடங்குகளை நடைபெறும்.
இதற்கிடையில் இந்தாண்டு தென்மாவட்டங்களில் தற்போது பருவமழை பொய்த்துவிட்டது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் செக்காரக்குடி பகுதி வானம் பார்த்த பூமி. இந்த பகுதியில் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் நடைபெறும். இந்த நிலையில் இந்தாண்டு மழை பொய்த்த காரணத்தினால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே செக்காரக்குடி கிராமத்தில் கடந்த வாரம் கிராமத்தின் சார்பில் ஊர்க்கூட்டம் போடப்பட்டு மழை பெய்ய வேண்டி கொடும்பாவி கட்டி எரிக்கும் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டனர்.
இதனையடுத்து இன்று செக்காரக்குடி கிராமத்தில் பருவமழை பெய்ய வேண்டி மனித உருவத்தை வைக்கோல் மற்றும் செடிகளால் செய்து, அதற்கு சட்டை அணிவித்து, பாடை கட்டி, அதை பருவமழைக்கு தடையாக இருக்கும் கொடும்பாவி எனும் மூதேவியாக பாவித்து, சாவு மேள தாளம், குறத்தி ஆட்டம் போன்றவைகளை நடத்தி அனைத்து தெருக்கள் வழியாக வந்து துடைப்பம் மற்றும் செருப்பால் அடித்து, ஒப்பாரி பாடல் பாடி தெருக்கள் வழியாக சென்றனர். இறுதியில் ஊரின் வெளிப்பகுதியில் உள்ள சுடுக்காட்டில் கொண்டு இந்த கொடும்பாவி எரிக்கப்பட்டது.
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை அதிகமாக பதிவாகியுள்ளது. தற்போது, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (நவ. 27) முதல் வரும் டிசம்பர் 1ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.