இளம் நடிகர் மீதான தடையை நீக்கிய தயாரிப்பாளர் சங்கம்

மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஸ்ரீநாத் பாஷி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் நடித்திருந்த சட்டம்பி என்கிற திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஒரு யு-டியூப் சேனலின் ஸ்டுடியோவிற்கு நேர்காணலுக்கு சென்ற இவர், தன்னை பேட்டி எடுத்த தொகுப்பாளினியை அநாகரிகமான வார்த்தைகளால் திட்டிய நிகழ்வு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அவர் மீது வழக்கும் பதியப்பட்டது. இவரது இந்த செயல் காரணமாக தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்த புகாரை தொடர்ந்து இவர் அடுத்தடுத்து புதிய படங்களில் நடிப்பதற்கு தற்காலிக தடையும் விதிக்கப்பட்டது.

ஆனால் சில நாட்களில் சம்பந்தப்பட்ட அந்த தொகுப்பாளினி அந்த நடிகரின் திரையுலக வாழ்க்கை தன்னால் பாதிக்கப்பட வேண்டாம் என்று கருதியதாலும் ஸ்ரீநாத் பாஷி அந்த பெண் தொகுப்பாளினியிடம் தனது செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டதாலும் அவர் மீது கொடுத்த புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டார். இருந்தாலும் அவர் மீதான தடை தற்போதுவரை நீடித்து வந்தது.

இந்த நிலையில் அவர் நடித்துள்ள படம் 'படச்சோனே இங்களு காத்தொலு' என்கிற படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்ரீநாத் பாஷிக்கு புதிய பட வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்துள்ளன. அதேசமயம் அவர் மீது நீடிக்கும் தடையால் அந்த வாய்ப்புகளை அவர் ஒப்புக் கொள்ள முடியாத சூழல் இருந்தது. இதைத்தொடர்ந்து அவரது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர் மீதான தற்காலிக தடையை மலையாள தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.