தமிழக அரசு கடந்த மாதம் 1-ந் தேதி ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசர சட்டத்தை இயற்றி கவர்னர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தது. இதனை கவர்னர் ஆர்.என்.ரவி அன்றைய தினமே பரிசீலனை செய்து உடனடியாக ஒப்புதல் அளித்தார்.
இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக நிரந்தர சட்ட மசோதா, கடந்த மாதம் 19 ம் தேதி தமிழக சட்டசபையில் தாக்கல் செய்து குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்பு கவர்னரின் ஒப்புதலுக்காக கடந்த மாதம் 28-ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 24-ந் தேதி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவுக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கவர்னர் கடிதம் எழுதினார். அவர் கேட்டுள்ள விளங்கங்களுக்கு தமிழக அரசு 24 மணி நேரத்திற்குள் பதில் அளித்தது. இருப்பினும் இந்த மசோதாவுக்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் அளிக்காததால் அதன் வரையறை காலாவதியாகிவிட்டது.
இது தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி தெரிவித்ததாவது, “கவர்னர் பதவியே தேவையில்லாத, காலாவதியான பதவிதான். ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காத நிலையில் அந்த மசோதாவே காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மியை பாதுகாக்க ஏன் இவ்வளவு துடிக்கிறார்கள் என்று தெரியவில்லை’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.