சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2002ஆம் ஆண்டில், ‘பாபா’ படம் மீண்டும் வெளியாகும் என்ற செய்தி இணையத்தில் பரவியதில் இருந்து கடந்த ஒரு வாரமாக ரசிகர்கள், ஊடகங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் வரலாறு காணாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக, சமூக ஊடகங்களில் உருவாகியுள்ள எதிர்பார்ப்பு மற்றும் வரவேற்பு மிகவும் ஆச்சரியம் ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று ஒரே ஒரு காட்சியாக திரையிட திட்டமிட்ட குழுவினர், படத்திற்கு ஏற்பட்டிருக்கும் பெரும் எதிர்பார்ப்பினை கண்டு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் பல திரையரங்குகளில் வெளியிட தீவிரமாக யோசித்து வருகின்றனர்.
DI,மிக்ஸிங் போன்ற தொழில்நுட்ப மாற்றங்கள் செய்து ‘பாபா’ படம் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், படத்தின் முன்னோட்டத்தை தானே முதலில் பார்வையிடுவதற்கு கோரிக்கை வைத்துள்ளார். இதன் மூலம், தன்னால் படத்தின் இசையினை மேலும் மேம்படுத்த இயலுமா? என்பதனை அவர் பார்வையிட உள்ளார்.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதிய காட்சிகளுக்கு டப்பிங் பேசியிருந்தார். சூப்பர் ஸ்டார் மற்றும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஆகிய இருவரும் பாபாவின் மறுவெளியீட்டுக்கான ஹைப் மற்றும் அற்புதமான வரவேற்பினை கண்டு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தினர்.
மேலும், சமீபத்தில் வெளியான ‘காந்தாரா’ படத்தின் பெரும் வெற்றியை அடுத்தே ‘பாபா’ படத்தை வெளியிடும் எண்ணத்தை ரஜினிகாந்த் பெற்றதாக இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, சமீபத்திய ஒரு பேட்டியில் கூறியுள்ளதாக தெரிகிறது.
‘காந்தாரா’ போன்று ‘பாபா’ திரைப்படமும் ஃபேன்டஸி வகையிலான படம் என்பதால், இந்த நேரத்தில் அப்படத்தை வெளியிட்டால் ரசிகர்கள் பெரு விருந்தாக இருக்கும் என்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கணக்கு. கூட்டி கழிச்சு பார்த்தா ரஜினியின் கணக்கு சிறப்பாக வரும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.