ஒரு படம் ரூ.200 கோடி வசூலித்தால் தயாரிப்பாளருக்கு என்ன கிடைக்கும்?

இந்திய சினிமாவில் ரூ.100 கோடி வசூல் என்பது ஒரு காலத்தில் பெரிய விஷயமாக இருந்தது. ஆனால், இப்போது 1000 கோடி வசூல் என்பதுதான் பெரிய வசூலாகப் பார்க்கப்படுகிறது. இந்த வருடத்தில் மட்டும் தென்னிந்திய அளவில் 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப்' ஆகிய படங்கள் 1000 கோடிக்கும் அதிகமான வசூலையும், 'பொன்னியின் செல்வன்' படம் 500 கோடி வசூலையும், 'விக்ரம், காந்தாரா' படங்கள் 400 கோடி வசூலையும் பெற்றுள்ளன என்பது பாக்ஸ் ஆபீஸ் தகவலாக உள்ளது.

படங்கள் அவ்வளவு வசூலித்தாலும் அப்படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு பணம் திரும்பக் கிடைக்கும் என்பது குறித்து தெலுங்குத் திரையுலகத்தின் பிரபல தயாரிப்பாளரும், விஜய் நடிக்கும் 'வாரிசு' படத் தயாரிப்பாளருமான தில் ராஜு, தெலுங்குத் திரையுலகத்தை உதாரணமாக வைத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

“ஒரு படத்தின் மொத்த வசூல் 200 கோடி ரூபாய் என்றால், அதில் 18 சதவீதம் ஜிஎஸ்டி தொகையாக, அதாவது 36 கோடி ரூபாய் போய்விடும். தியேட்டர்களுக்கான வாடகை என்ற விதத்தில் 25 சதவீதம் போய்விடும். மீதமுள்ள 114 கோடிதான் வினியோகஸ்தர்களுக்கான பங்குத் தொகையாக வரும். அப்படத்தை திரும்பத் தர முடியாத அட்வான்ஸ் தொகையாக வினியோகஸ்தர் வாங்கியிருந்தால் அதில் மேலும் 25 சதவீதம் குறையும். எஞ்சியுள்ள 86 கோடி ரூபாய் மட்டுமே தயாரிப்பாளர் கைக்கு வரும்.

ஒரு தயாரிப்பாளருக்கு ஒரு படத்தின் மூலம் 100 கோடி கிடைத்தால் அதில் 95 கோடியை அட்வான்ஸ் தொகையாக மட்டுமே அவர் மற்றவர்களுக்குத் தந்துவிடுகிறார். மீதமுள்ள 5 கோடி என்பது படத்தின் வெளியீடு தாமதமானால் அதற்கான வட்டியாக அது போய்விடும். ஒரு தயாரிப்பாளர்தான் ஒரு படத்திற்கு முதலில் முதலீட்டைச் செய்கிறார், அதே சமயம் அந்தப் பணம் அவருக்கு கடைசியாகத்தான் திரும்பக் கிடைக்கிறது. நடிகர்கள், நடிகைகள் மற்ற கலைஞர்கள் ஆகியோர் ஒரு தயாரிப்பாளரிடமிருந்து அட்வான்ஸ் ஆகவே சம்பளத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். படம் வெளியாகி வசூல் செய்து, அதன் பின்னரே தயாரிப்பாளர் முதலீடு செய்த பணம் தாமதமாக திரும்ப வரும்.

ஓடிடி தளங்களில் யாரும் படத்திற்கான உரிமைத் தொகையை முன்கூட்டியே தருவதில்லை. அப்படம் ஓடிடியில் வெளியாகி ஒரு மாதம் கழித்துத்தான் அதற்கான தொகையைத் தருவார்கள். எனவே, ஒரு படத்தைத் தயாரித்து வெளியிட பைனான்சியர்களை நம்பி இருக்க வேண்டும்,” என தயாரிப்பாளர்களின் நிலையைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். இது மற்ற திரையுலகத்திற்கும் பொருந்தும் ஒன்றுதான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.