தெலுங்கானாவில் பரபரப்பு. முதல்வரின் சகோதரியை காருடன் அலேக்காக தூக்கிய போலீஸ்..!

தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர் ராவ் தலைமையில் டிஆர்எஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சரான ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா ரெட்டி ஒய்எஸ்ஆர் தெலுங்கானா என்ற பெயரில் கட்சி அமைத்துள்ளார்.

இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர். மற்றும் சந்திரசேகர் ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதிக்கு இடையே அரசியல் மோதல் இருந்து வருகிறது. ஆளுங்கட்சிக்கு எதிராக ஷர்மிளா ரெட்டி அரசியல் தீவிரத்தை காட்டி வருகிறார்.

தெலுங்கு மாநிலங்களான இரண்டிலும் வெவ்வேறு சித்தாந்தத்தை கொண்ட இரு முதல்வர்கள் ஆட்சி அமைத்து வரும் நிலையில் அவ்வப்போது இருவருக்குள்ளும் கருத்து மோதல் இருந்து வருகிறது. ஆந்திராவை ஆட்சி செய்வதை போல தெலுங்கானாவில் தடம் பதிக்க ஒய்எஸ்ஆர் தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவுக்கு எதிராக போராட்டம் நடத்த முதல்வரின் இல்லத்துக்கு ஷர்மிளா ரெட்டி காரில் புறப்பட்டு கொண்டிருந்தார். இந்த தகவல் போலீசாருக்கு சென்றுள்ளது. ஷர்மிளா ரெட்டியை அவரது ஆதரவாளர்கள் பின்தொடர்ந்து சென்றனர். இதனிடையே முதல்வரின் வீட்டுக்கு முன்பு குவிந்திருந்த போலீசார் ஷர்மிளா ரெட்டியை காருடன் வழி மறித்து தடுப்புகளை போட்டனர்.

ஆனாலும், ஷர்மிளா ரெட்டி காரில் இருந்து இறங்கவில்லை. இதனை அடுத்து, போலீசார் கிரேன் மூலம் ஷர்மிளா ரெட்டியை காருடன் அலேக்காக தூக்கி சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்தரத்தில் காருடன் இழுத்து செல்லப்பட்ட ஷர்மிளா ரெட்டியை அவரது ஆதரவாளர்கள் பின்தொடர்ந்து கொண்டே கோஷம் இட்டு சென்றனர்.

அதன் பின்னர் ஷர்மிளா ரெட்டியை போலீசார் கைது செய்து கொண்டு சென்றனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.