இயக்குநர் சிவாவுடனான படம், பாலா இயக்கத்தில் வணங்கான், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என படுபிஸியாக இருக்கிறார் சூர்யா. ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும் சூர்யாவுக்கு தெலுங்கிலும் ரசிகர்கள் இருக்கின்றன. சமீபத்தில் அவர் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்த ஜெய் பீம் படத்துக்கு தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனால் தெலுங்கிலும் சூர்யா தனது கவனத்தை செலுத்தியுள்ளார். இந்தச் சூழலில் தனியார் தொலைக்காட்சிக்கு சூர்யா நேர்காணல் அளித்தார். அப்போது பிரபாஸ் குறித்து பேசிய அவர், “நான் ஷூட்டிங்கில் ஹைதராபாத்தில் இருந்தபோது,பிரபாஸ் என்னை அழைத்து இரவு உணவிற்கு அழைத்தார். நான் வருகிறேன் என்று சொன்னேன், ஆனால் எனது படப்பிடிப்பு இரண்டு மணி நேரம் தாமதமாகி விட்டது.
மாலை 6 மணிக்கு தொடங்க இருந்த ஷூட்டிங், இரவு 8 மணிக்கு தொடங்கி இரவு 11:30 மணி வரை நீட்டிக்கப்பட்டது. நான் பிரபாஸை பிறகு சந்திக்கலாம் என்று நினைத்தேன், அப்போது அவரிடம் மன்னிப்பு கேட்கலாம் எனவும் திட்டமிட்டிருந்தேன். அன்று இரவு ஹோட்டல் உணவு அல்லது தயாரிப்பு நிறுவன மெஸ்ஸில் இருந்து சாப்பாடு வரும் என நினைத்தேன்.
இரவு 11.30 மணியளவில், ஹோட்டலின் தாழ்வாரத்தில் பிரபாஸ் எனக்காக சாப்பிடாமல் காத்துக்கொண்டிருந்தது அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவர் அம்மா தயாரித்த உணவை எனக்கு கொண்டு வந்தார். என் வாழ்நாளில் அவ்வளவு சுவையான பிரியாணி சாப்பிட்டதில்லை” என்றார்.
பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார் பிரபாஸ். அதனையடுத்து அவருக்கென்று ரசிகர் பட்டாளம் உருவானது. அதன் பிறகு பெரிய பட்ஜெட் படங்களில் நடித்துவரும் அவர் சமீபத்தில்’சாஹோ’, ‘ராதே ஷ்யாம்’ ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. இதனையடுத்து கேஜிஎஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீலின் ‘சலார்’ மற்றும் ஓம் ராவத்தின் ‘ஆதிபுருஷ்’ ஆகிய படங்களை மிகவும் எதிர்பார்த்திருக்கிறார் அவர். ஆனால் ஆதிபுருஷ் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ட்ரோலை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.