டில்லியில் முகாமிட்டுள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை, நேற்று மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியுஷ் கோயலை சந்தித்து கலபுரகி, துமகூரு, விஜயபுரா ஆகிய மூன்று மாவட்டங்களில் மித்ரா திட்டத்தின் கீழ் மெகா ஜவுளி பூங்கா அமைக்கும்படியும்; 2 லட்சம் டன் அரிசி வழங்கும்படியும் வலியுறுத்தினார்.
பின், மத்திய தொழிலாளர் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவை சந்தித்து, பல்லாரியின் குடேகோட்டை கரடி சரணாலயம், பெலகாவியின் பீம்காட் வன விலங்கு சரணாலயத்தை சுற்றியுள்ள பகுதிகளை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க கோரினார்.
தொடர்ந்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து, பெலகாவி மாவட்டம், துகமட்டி கிராமத்தில் ராணுவத்துக்கு சொந்தமான 732.24 ஏக்கர் நிலத்தை மாநில அரசு திட்டங்களுக்காக ஒப்படைக்கும்படி கேட்டு கொண்டார்.
இன்று ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்த உள்ளார். மேலும், கட்சி விஷயங்கள் தொடர்பாக, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா சந்திப்புக்கும் நேரம் கேட்டுள்ளார்.
மேகதாது குறித்து இன்று வலியுறுத்தல்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement