குடும்ப செலவு தகராறில் கொலை : காதலியை கொன்றவர் தகவல்| Dinamalar

புதுடில்லி:குடும்ப செலவு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து கொலை செய்ததாக, காதலியைக் கொன்று துண்டு துண்டாக்கிய அப்தாப் புனேவாலா, ‘நார்கோ’ பரிசோதனையில் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த அப்தாப் புனேவாலா, ஷ்ரத்தா வால்கர்இருவரும் காதலர்களாக பழகி வந்தனர். குடும்பத்தினர் எதிர்ப்பைத் தொடர்ந்து இருவரும் புதுடில்லிக்கு இடம்பெயர்ந்தனர்.இதற்கிடையே, கடந்த மே மாதம் ஷ்ரத்தாவைக் கொலை செய்து, ௩௫ துண்டுகளாக்கி பல்வேறு இடங்களில் அப்தாப் வீசியது சமீபத்தில் தெரியவந்தது.கைது செய்யப்பட்டுள்ள அப்தாப், விசாரணையின்போது முரண்பட்ட தகவல்களை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த புதுடில்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது.இதன்படி அவருக்கு சமீபத்தில், ‘பாலிகிராப்’ பரிசோதனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, ‘நார்கோ அனாலசிஸ்’ எனப்படும் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையின் போது, குடும்ப செலவு தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது வந்த ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் அப்தாப் கூறியதாக தெரிகிறது.

போலீசில் சிக்காமல் இருக்க, ஷ்ரத்தாவின் உடலை துண்டு துண்டாக்கி பல இடங்களில் வீசியதாகவும், அவருடைய பொருட்களை பல இடங்களில் வீசியதாகவும் அப்தாப் கூறியுள்ளார்.இந்த பரிசோதனைகளில் அப்தாப் தெரிவிக்கும் தகவல்கள் சட்டப்படி ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படாது. அதே நேரத்தில் இந்த தகவல்களின் அடிப்படையில், போலீசார் மேல் விசாரணை நடத்தி ஆதாரங்களை சேகரிக்க முடியும்.

இதற்கிடையே, பல்வேறு இடங்களில் கிடைத்த ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள், மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் முடிவுக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.
இதன்பிறகே, இந்த வழக்கின் விசாரணை தீவிரமடையும் என போலீசார் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.