சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் சசிதரூர் விடுதலை எதிர்த்து; ஐகோர்ட்டில் போலீஸ் அப்பீல்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014 ஆண்டு டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், சசிதரூர் தனது மனைவியை கொடுமைப்படுத்தி, தற்கொலைக்கு தூண்டியதாக டெல்லி போலீசார் கூறியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2021ம் ஆகஸ்ட் 18ம் தேதி சசிதரூரை விடுவித்து தீர்ப்பளித்தது. இந்த நிலையில், சசிதரூர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் போலீசார் மேல் முறையீடு செய்துள்ளனர்.

இந்த மனு நீதிபதி டி.கே.சர்மா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,சசிதரூர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  சசிதரூர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை. மேல் முறையீட்டு மனுவின் நகலை சசிதரூருக்கு அனுப்பாமல், வேண்டுமென்றே தவறான மின்அஞ்சல் முகவரிக்கு போலீஸ் தரப்பில் அனுப்பி உள்ளதாக புகார் கூறினார். இதையடுத்து, சசிதரூர் வக்கீலிடம் மனுவின் நகலை தர உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.