பயணிகளை முகத்தின் மூலம் அடையாளம் காணும் 'டிஜி யாத்ரா': 3 விமான நிலையங்களில் அறிமுகம்

டெல்லி, பெங்களூரு, வாரணாசி ஆகிய விமான நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக ‘டிஜி யாத்ரா’ என்ற புதிய தொழில்நுட்பம் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விமான நிலையங்களில் நுழைவு முதல் விமானங்களில் ஏறுவது வரை பயணிகளின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கும் வகையில்  ‘டிஜி யாத்ரா’ என்ற முகத்தோற்றம் மூலம் அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை டெல்லி, பெங்களூரு, வாராணசி ஆகிய மூன்று விமான நிலையங்களில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது

image
‘டிஜி யாத்ரா’ என்பது ஒரு செயலி ஆகும். இந்த சேவையை பெற ‘டிஜி யாத்ரா’ செயலியில் பயணிகள் ஆதார் எண் அடிப்படையில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ‘செல்பி’ புகைப்படம் ஒன்றையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். போர்டிங் பாசை ‘ஸ்கேன்’ செய்ய வேண்டும். இதைத்தொடர்ந்து, பயணிகளின் விவரங்கள் விமான நிலையத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும். விமான நிலைய இ-கேட்டில் பயணிகள் ‘பார்கோடு’ ஒட்டப்பட்ட போர்டிங் பாஸை ஸ்கேன் செய்ய வேண்டும். இதையடுத்து பயணிகள் இ-கேட் வழியாக விமான நிலையத்துக்குள் நுழையலாம். பாதுகாப்பு சோதனை பகுதி உள்பட எல்லா சோதனை பகுதிகளையும் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தால் பயணிகள் விரைவாக விமானத்தில் ஏறலாம்.

image
இந்த ‘டிஜி யாத்ரா’ முறையை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார். இதுகுறித்து ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறுகையில், ”பயணிகளின் விவரங்கள் டிஜி யாத்ராவில் ரகசியமாக பாதுகாக்கப்படும். விமான நிலையத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட விவரங்கள், பயணம் முடிந்த 24 மணி நேரத்தில் தானாக அழிந்து விடும்” என்றார்.

உள்நாட்டு விமான சேவையை பயன்படுத்தும் பயணிகளுக்கு மட்டும் இது அமல்படுத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு (2023) மார்ச் மாதத்துக்குள் ஹைதராபாத், புனே, விஜயவாடா, கொல்கத்தா ஆகிய விமான நிலையங்களிலும் அமலுக்கு வரும். பிறகு மற்ற விமான நிலையங்களிலும் அமல்படுத்தப்படும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.