ஸ்கூட்டரில் சென்ற மாணவி சிறுத்தை பாய்ந்து படுகாயம்

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஸ்ரீ மதுரை ஊராட்சி ஏச்சம் வயல் பகுதியில் வசிப்பவர் ராஜூ கூலித் தொழிலாளி. இவரது மகள் சுசீலா (18). கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் படித்து வருகிறார். மேலும், அங்குள்ள ஜவுளிக்கடையில் பகுதி நேர வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல வேலை முடிந்து தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பினார். புத்தூர் வயல் பகுதிக்கு முன்பு உள்ள தனியார் மருத்துவமனை பகுதியில் சென்றபோது, சாலை ஓரத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று திடீரென ஸ்கூட்டர் மீது பாய்ந்தது.

இதில், நிலைத்தடுமாறிய சுசீலா, ஸ்கூட்டருடன் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அப்போது, அந்த வழியாக ஆட்டோ ஒன்று வந்ததால் சிறுத்தை அங்கிருந்து ஓடியது. இதையடுத்து ஆட்டோவில் வந்தவர்கள் சுசீலாவை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுசீலா சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.