கருணை கொடை உயர்த்தவேண்டும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் கோயில் பணியாளர்கள் மனு

பெரம்பூர்: இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவை தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் சங்கத்தினர்  சென்னை ஓட்டேரியில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், ‘’இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் பணியாற்றிவரும் பணியாளர்களுக்கு கருணை கொடையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்ததை 2020-21ம் ஆண்டில் 2000 ஆக உயர்த்தி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.  

அதே நேரத்தில் சி மற்றும் டி பிரிவு அரசு பணியாளர்களுக்கு 3000 மிகை ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்து சமய அறநிலைத்துறை கோயில்களில் பணிபுரியும் பணியாளர்கள் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களை விட குறைவாகவே ஊதியம் பெறுகின்றனர். எனவே 2021- 22ம் ஆண்டு வழங்கப்பட்ட கருணைக் கொடையை உயர்த்தி சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கும் சிறப்பு மிகை ஊதியம் வழங்குவதுபோல கோயில் பணியாளர்களுக்கும் 3000 மிக ஊதியம் வழங்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.

‘‘நீங்கள் கொடுத்துள்ள மனு மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.  அப்போது திருக்கோயில் தொழிலாளர் யூனியன் மாநில பொதுச்செயலாளர் முத்துசாமி, சென்னை கோட்ட கவுரவ தலைவர் வேலாயுதம், தலைவர் தனசேகர், பொருளாளர் குகன், அமைப்பாளர் செந்தமிழ்ச்செல்வி, வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.