நியூயார்க் :’சீனாவின் வூஹானில் உள்ள ஆய்வுக் கூடத்தில், மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ்’ என, அங்கு பணியாற்றிய அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்து உள்ளார்.
கொரோனா வைரஸ், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, உலகெங்கும் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசின் முதல் பாதிப்பு, சீனாவின் வூஹானில் தான் உறுதியானது.
அரசு சாரா ஆய்வு
அங்குள்ள வைராலஜி மையத்தில் இருந்து, இந்த வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. ஆனால், இதை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஆன்ட்ரூ ஹப் என்ற விஞ்ஞானி எழுதியுள்ள புத்தகத்தில், கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
இவர், நியூயார்க்கைச் சேர்ந்த, ‘ஈகோ ஹெல்த் அலையன்ஸ்’ என்ற அரசு சாரா ஆய்வு மையத்தில் விஞ்ஞானியாக இருந்து உள்ளார்.
இந்த அமைப்பு, பல்வேறு வைரஸ் நோய்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்கிறது.
தன் புத்தகம் குறித்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இருந்து வெளியாகும், ‘த சன்’ என்ற பத்திரிகைக்கு விஞ்ஞானி ஆன்ட்ரூ ஹப் பேட்டியளித்தார். இந்தத் தகவல்களை நியூயார்க்கில் இருந்து வெளியாகும்,
வூஹான் வைராலஜி மையம்
‘நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்டுள்ளது. தன் புத்தகம் மற்றும் பேட்டியில் விஞ்ஞானி ஹப் கூறியுள்ளதாவது:
சீனாவைச் சேர்ந்த வூஹான் வைராலஜி மையத்தில் தான், கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வு நடந்தது. இதற்கான நிதியுதவியை, அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய சுகாதார மையம் அளித்துள்ளது.
வவ்வால்களில் காணப்படும் கொரோனா வைரசை மற்ற உயிரினங்களில் பரவச் செய்ய முடியுமா என்ற ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது.
இதன்படியே, வூஹான் மையத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வு நடந்தது.
சாத்தியம் அதிகம்
அந்த ஆய்வின்போது நானும் வூஹான் மையத்தில் பணியாற்றியுள்ளேன். அந்த மையத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை.
இந்த ஆய்வுக்கு நிதி உதவி அளித்ததன் வாயிலாக, உயிரி ஆயுதம் தயாரிக்கும் வாய்ப்பை சீனாவுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.
இந்த கொரோனா வைரஸ், மனிதர்களால் உருவாக்கப்பட்ட வைரஸ் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.
ஆனால், அது எப்படி பரவியது என்பது தெரியவில்லை. இருப்பினும், வூஹான் மையத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால், அங்கிருந்து பரவியிருப்பதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்