'வணங்கான்' – சூர்யா இடத்தில் அதர்வா?

பாலா இயக்கத்தில், சூர்யா சில நாட்கள் நடித்த 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டார் என்பது நேற்று வெளியான அறிக்கை மூலம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சூர்யா தான் விலகிவிட்டார், ஆனால், 'வணங்கான்' வேலைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சூர்யாவுக்குப் பதிலாக அந்தப் படத்தில் ஆர்யா நடிக்கலாம் என்ற ஒரு தகவல் முதலில் வெளியானது. ஆர்யா இல்லை சூர்யாவுக்குப் பதிலாக அதர்வா தான் அதில் நடிக்க உள்ளார் என்று கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலாவே அவரது சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான பி ஸ்டுடியோஸ் மூலம் இப்படத்தைத் தயாரிக்கும் முடிவில் இருக்கிறாராம்.

'வணங்கான்' படத்தின் திரைக்கதையை பாலா மொத்தமாக எழுதி சூர்யாவிடம் கொடுத்திருந்தாராம். அதில் உள்ள கிளைமாக்ஸ் பகுதி மட்டும் சூர்யாவுக்குப் பிடிக்காமல் போயிருக்கிறது. அதை மாற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் சூர்யா. விதவிதமான ஐந்து கிளைமாக்ஸ்கள் வரை சொல்லியும் சூர்யா எதுவுமே பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாராம். இன்னும் எத்தனை மாற்றுவது என ஒரு கட்டத்தில் சூர்யா மீது வெறுப்படைந்த பாலா, மேற்கொண்டு எந்த சிக்கலும் ஏற்படாமல் இருக்க இருவரும் இப்படத்திலிருந்து பிரிந்துவிடுவோம் என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார். அதுவே சரியென்று சூர்யாவும் சம்மதித்துவிட்டாராம்.

கன்னியாகுமரில் ஆரம்பமான முதல் கட்டப் படப்பிடிப்பு சுமார் ஒரு மாத காலம் நடந்திருக்கிறது. அதில் பாலா படமாக்கிய காட்சிகள் இரண்டே இரண்டுதான் என்கிறார்கள். அந்த 30 நாளில், 25 சதவீதப் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்க வேண்டும். அதே ரீதியில் போனால் படம் எப்போது முடியும், எவ்வளவு செவாகும் என்பதை கணக்குப் போட்டுப் பார்த்து தயாரிப்பிலிருந்தும் சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் விலகிக் கொண்டது என்று சொல்கிறார்கள்.

இத்தனை வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்து பணியாற்றி இன்னல் ஏற்படுவதை விட இன்முகத்துடன் இப்போதே பிரிவது நல்லது என்று இனிதாய் பிரிந்திருக்கிறார்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.